ஹலோ... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு அழகான பொண்ணுங்களைக் கண்டாலே பிடிக்காது.அது ஏன்னு எனக்கும் தெரியலை.அதுக்கு முன்னாடி நான் எங்க இருக்கேன்னு சொல்லிடுறென்.நான் இருக்கிறது இந்தோர்ல.இந்தோரைப் பத்திக் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, இது ஒரு தொழில் வளமுள்ள ஒரு நகரம்.(இப்படியே போனா நியூஸ் ரீல் ஆயிடும்.மேட்டருக்கு வருவோம்)இங்க பொண்ணுங்கதான் இன்னொரு சிறப்பு.இங்க இருக்கிற பொண்ணுங்களை ரெண்டு வகையாப் பிரிக்கலாம்.முதல் வகை அழகானவங்க. ரெண்டாவது வகை ரொம்ப அழகானவங்க. முன்னயே சொன்ன மாதிரி எனக்கு அழகான பொண்ணுங்களைப் பிடிக்காததுனால, ரொம்ப அழகான பொண்ணுங்களைப் பார்க்குறதுக்காகவே 'மங்கள்சிட்டி'ன்ற புண்ணியதலத்துக்கு தினமும் ஈவினிங் விசிட் பண்ணுவேன்.இத்தலத்தை 'ஷாப்பிங் மால்'ன்னு தெளிவா, தமிழ்ல சொன்னாப் புரியும்ன்னு நினைக்கிறேன்.இங்க பொருள் வாங்குறதெல்லாம் நம்ம பழக்கமில்லை.ஏன்னா அதெல்லாம் வாங்குனா காசு குடுக்கணுமாம்.அதனால சிம்பிளா ஒரு வசதியான இடத்துல உட்கார்ந்துகிட்டோ, நின்னுகிட்டோ வேடிக்கை பார்த்துட்டிருப்போம்.(என்ன பன்மை வந்துடுச்சேன்னு பார்க்குறீங்களா..நம்ம ஃப்ரெண்டு ஒருத்தர் கூடச் சேர்ந்துட்டாரு). நான் அக்கறையா ஒரு தூரத்துப் பச்சையைப் பார்த்துட்டிருக்கப்ப, ராஜா (அட..புது கேரக்டரெல்லாம் கிடையாது.ஃப்ரெண்டோட பேருதான்)'உனக்கு ஃபோன்'னு அவன் மொபைலக் குடுத்தான்..
'சரி'ன்னு ஃபோனை வாங்கி அவன்( (ராகவன் எ ரெமோ)கிட்ட பேசினேன்.
'சித்தப்பு..எனக்கு சௌத் இந்தியன் மிஸ் இருக்க இடம் தெரியும் 'ன்னு சொன்னான்.
ஃபிகர் கடந்து விட்ட கடுப்பில்,'அடேய்.. சௌத் இந்தியன் மிஸ் எல்லாம் பிட்டர். இந்தோர் மிஸ்தான் பெட்டர்' ன்னேன். 'அட பட்டரு...நான் சொன்னது சௌத் இந்தியன் மெஸ்ஸை. சோறு அன்லிமிட்டெட் ஆஃபர். வந்தா வா...'ன்னுட்டு காலை கட் பண்ணிட்டான்."சோறு கண்ட இடம் சொர்க்கம்"ன்னு சும்மாவா சொன்னாங்க. பொண்ணப் பார்த்தா, வழக்கம் போல பன்னத் தின்னுட்டு, தண்ணியைக் குடிக்க வேண்டியதுதான்னு ஒரு எச்சரிக்கை உணர்வோட மறுபடியும் ரெமோவுக்குக் கால் பண்ணேன். 'நண்பா... பழி வாங்குறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இப்போ மெஸ் எங்க இருக்கு சொல்லு ராஜா'ன்னு தாஜா பண்ண ஆரம்பிச்சதுல, பயபுள்ள உருகி வழி சொல்ல ஆரம்பிச்சான். 'இப்போ எங்க இருக்க..? மங்கள்சிட்டியிலயா... சரி அப்படியே ரோட்டக் கிராஸ் பண்ணி,இந்தப் பக்கம் ரெண்டு எட்டு எடுத்து வச்சேன்னா, ஒரு சந்து வரும் அதுல உள்ள நுழஞ்சு அப்டியே ,இப்டி வந்தேன்னா...' சொல்லிக்கிட்டே போனவன இடைமறிச்சு,'அடேய் வென்ரு, ஃபோன்ல பேசும் போது கைய,கால நீட்டிலாம் வழி சொல்லக்கூடாது. ஒழுங்கா சொல்லு'ன்னேன்.ஒருவழியா வழிசொல்லும் படலம் முடிஞ்சு,நாங்க நடக்க ஆரம்பிச்சாச்சு.ஸ்பாட்டை நெருங்குறதுக்கு முன்னாடி உறுதி செஞ்சுக்கிறதுக்காக மறுபடியும் அவனைக் கூப்பிட்டு, நாங்க இருக்க இடத்தைச் சொன்னேன். 'அப்படியே நேரா வந்தா, இங்க ஒரு எலக்ட்ரிசிட்டி கம்பம் இருக்கும். பக்கத்துல நான் நிக்கிறேன்'ன்னான். 'நீ இருக்கிற உசரத்துக்கு ,கம்பம் பக்கத்துல நிக்காத. எவனாவது தப்பா நினைச்சுக்கிட்டு உன்மேல டுட்டோரியல் சென்டரு,கம்ப்யூட்டர் சென்டரு நோட்டீஸெல்லாம் ஒட்டிறப் போறானுங்க'ன்னு நான் முடிக்கிறதுக்குள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
ஒருவழியா இடத்தைக் கண்டுபிடிச்சு, சம்பவம் நடந்த இடத்திற்குப் போனோம்.(தலைப்பை மறந்துட்டீங்களா..?) SICA (South Indian Cultural Association) அப்படீன்ற அமைப்பு நடத்துறதுதான் இந்த மெஸ். நம்ம சௌத் இந்தியன் டிஷஸெல்லாமே கிடைக்கும்,கொஞ்சம் காஸ்ட்லி. அதுவா முக்கியம்.(சோறே சொர்க்கம்).இங்க மேனேஜர் மட்டும் தமிழ் ஆளு(தூத்துக்குடி ஏரியா) அதனால தமிழ் கொஞ்சம் தேங்காயெண்ணை வாசத்தோடு இருக்கும். வேலை பார்க்குற, சமைக்கிற, பரிமாறுற எல்லாரும் வட இந்தியர்களே. இங்க சாப்பிட வர்றவங்க சரிபாதி பேருதான் (தமிழ் மற்றும் ஆந்திரம்). மீதி எல்லாரும் கிண்ணத்துல முக்கி,முக்கி சாம்பார் குடிக்க வர்ற 'ஹம் ஆப்கே கெயின்கோன் ஃபாமிலி'தான். அதனால யாரையுமே பாத்த உடனே அடையாளம் கண்டுபிடிச்சு தமிழ்ன்னா உடனே மொக்கை போட ஆரம்பிச்சுருவோம். திராவிட நிறத்தில இருந்தா தமிழ்ன்னு உடனே தெரிஞ்சுரும். கொஞ்சம் கலராவோ,ஆனால் மீசையுடனோ இருந்தா லைட்டா டவுட் வரும் தமிழா, ஆந்திராவான்னு. ஆனா அது அவர் எதை முதல்ல சாப்பிடுறார்ங்கிறதப் பார்த்தவுடனே தெரிஞ்சுடும். ஊறுகாயைத் தொட்டா ஆந்திரா. அப்பளம் கேட்டா தமிழ்நாடுன்னு. சாப்பிட்டுக்கிட்டிருக்கும் போது தமிழ் தெரியாத ஆள்ங்க வந்தா எங்களுக்குள்ளேயே தமிழ்ல கமெண்ட் பண்ணி சிரிச்சிப்போம். முடிஞ்சளவுக்கு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து, முழுக்க,முழுக்கத் தமிழ்லேயே பேசிப்போம்.(வட இந்திய அம்மணிகள் முள் கரண்டியால் தோசை சாப்பிடும் அழகே அழகு).
சம்பவம் நடந்த அன்னிக்கு நான்,ராஜா,ரெமோ மூணு பேரும் சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். அப்போதான் அந்த நாலு பேரு ஒரு இரண்டரை வயசுக் குழந்தையோட உள்ள வந்தாங்க.ரெண்டு தம்பதிகள். அதுல ஒருத்தர் நல்லா உயரமா,குறுந்தாடியோட இருந்தார். இரண்டு பெண்களுமே பளீரெனத் தெரிந்தனர்.வட இந்திய உடையில் இருந்ததால், அவர்கள் அனைவருமே வட இந்தியர்கள் என ஒரு மினி பொதுக்குழு போட்டு முடிவு பண்ணிட்டோம்.அப்போதான் ராஜா சொன்னான்,'மச்சான்..எனக்கு டவுட்டாத்தான் இருக்கு. கொஞ்சம் அமுக்கி வாசிப்போம்'னு.சரினு மெதுவான குரலில் கிசுகிசுக்க ஆரம்பித்த வேளையில ,குறுந்தாடிக்காரர் தன் மகளிடம் 'அப்பளம் சாப்பிடு'ன்னு சொன்ன உடனே நாங்க உஷாராயிட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது வந்தவங்கள்ள, குழந்தையோட வந்திருந்த தம்பதிகள் தமிழ்நாடுன்னு.
அவங்க தமிழ்நாடுன்னு தெரிஞ்சப்புறம்,கமெண்ட்டை நிறுத்திட்டு எப்படி அவங்ககிட்ட பேச்சை ஆரம்பிக்கிறதுன்னு நெனச்சுட்டிருந்தோம்.வழக்கம்போல எங்களுக்குள்ளேயெ தமிழ்ல கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிச்சோம்.எல்லோரையும் போலவே அந்தக் குறுந்தாடிக்காரரும் எங்களைப் பார்த்து 'எங்க வேலை பார்க்குறீங்க'ன்னு விசாரிக்க ஆரம்பிச்சார்.அதைப் பிக்கப் பண்ணிட்டு, சகஜமாப் பேச ஆரம்பிச்சோம்.இடையிடையே குழந்தையுடன் விளையாடிக்கிட்டே நாங்க எங்க டின்னர முடிச்சோம்.அப்படியே அவங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பினோம்.எனக்கு முன்னாடி ராஜாவும், ரெமோவும் பில்லுக்குப் பணம் கொடுக்கப் போயிட்டாங்க.நான் குழந்தைக்கு டாட்டா காமிச்சுட்டே ,கிளம்பி கதவுக்கிட்டப் போகையில, அவங்க அப்பா குழந்தைகிட்ட,'மாமாவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடு'ன்னாரு.நானும் திரும்பி நின்னேன். பாப்பாவும் ஒரு பறக்கும் முத்தம் குடுத்துச்சு. பதிலுக்கு நானும் ஒண்ணு குடுத்துட்டு திரும்பப் புறப்படுறப்போ,'அங்கிள்...' பாப்பாவின் குரல் கேட்டு நின்னு திரும்பிப் பார்த்தேன்.பாப்பா சிரிச்சுக்கிட்டே................'அங்கிள்... மம்மிக்கு கிஸ்...?'ன்னு போட்டது ஒருபோடு.
அப்போதான் எனக்குக் கண்ணக் கட்டுச்சு.ஒரு வினாடி செயலிழந்து,அப்புறம் உடனே சுதாரிச்சுட்டேன்.இதுக்கப்புறம் அவங்க இருந்த ஏரியா பக்கமே பார்க்காம விறுவிறுன்னு நடையைக் கட்ட ஆரம்பிச்சேன்.பாப்பாவின் (அ)நியாயமான திடீர்க் கோரிக்கையில் அமைதியான இடம் ஓரிரு நிமிடங்களுக்குப் பின்னாடி இரு பெண்களின் 'கலீர்'ச் சிரிப்புடன் தொடர்ந்த (முத்தம் குறித்த)கேலிப்பேச்சினால் நார்மலானது.பாப்பாவுக்கு முத்தம் குடுக்கச் சொன்ன அவங்க அப்பாவோட முகத்தை என்னால கற்பனை கூடப் பண்ணிப்பார்க்க முடியல.
இப்போ சொல்லுங்க... ஏதோ அறியாத்தனமா அந்தக் குழந்தை கேட்டதுக்காக முத்தம் குடுத்துருந்தா என் உடலுக்குத்தானே கேடு.....
பி.கு.1:அந்தக் குறுந்தாடிக்காரர் தற்பொழுது தமிழகத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டார்.
பி.கு.2:சௌத் இந்தியன் மெஸ் சில, பல நிர்வாகக்காரணங்களால் இரு மாதங்களுக்கு முன் மூடப்பட்டுவிட்டது.
டிஸ்கி: தயவுசெய்து பி.கு.1 க் காரணம் ,இப்பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுதான் என நீங்களாகக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.