ஷண்முகப்ரியா ராகமாம்.(நன்றி. எஸ்.பி. சைலஷா). எனக்குத் தெரியாது. ரவி சார் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன். ராஜாவின் இசையில் விரகமும், காதலும்(நல்லதோ கெட்டதோ காதல்தான் அது. வள்ளுவரின் வாக்கில் சொன்னால் ‘காமம்’), தவிப்பும், ஏக்கமும், இயலாமையும் பிரவாகமாய் வெளிப்படும் பாடல்.ஆரம்பப் பின்னிசையிலேயே நான் இதைத்தான் சொல்லப் போகிறேன் எனச் சொல்லிவிடுவார்.(இப்பல்லாம் படங்களுக்கு டிரைலர் காட்டுவது போல).
குழலில் ஆரம்பிக்கும் தாகம், பின் வயலின்களின் வருகையால் ஆறுதலடையும் நேரத்தில் வந்துவிடுவார் ஜானகி ‘சொல்லாயா’ எனச் சொல்லிக் கொண்டு. உடனே ஆரம்பித்துவிடும் தபேலாவின் தட்டுக்கள் மற்ற ராஜாவின் பாடல்களில் வரும் தாலாட்டுத் தட்டுக்கள் அல்ல.சிறிதே சீண்டிப்பார்க்கும் செல்லத் தட்டுக்கள்.
பல்லவி முடியவும் வரும் இசை சிதாரில் ஆரம்பித்துப் பின் வயலின்களைப் பாடவிட்டுப் பக்கவாத்தியமாகிவிடுகின்றது.
சரணத்தில்
‘ஆகாய சூரியன் மேற்கினில் சாய...
ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
தாமதம் இனியேனோ இருமேனி கூட’ இதுவரையில் செல்லத்தட்டு தட்டிய தபேலா‘அந்திவரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்’எனும் வரிகளில் வேக,விவேகமாக ரிதம் மாறி, நம்மை ஒரு விதமாக உருட்டிச் செல்லும்.
இரண்டாவது பின்னிசையின் போது தபேலா மவுனமாக, வந்து விடுவார்கள் பிரதான வயலின் பாடகர்கள்.சிறிது தாபத்தை அது கொடுக்க புல்லாங்குழல் வந்து கசியவிடும் சோகம் இனிது.ஜானகியின் பங்களிப்பைப் பற்றி நானென்ன பெரிதாகச் சொல்லப் போகிறேன். அதெல்லாம் அனுபவிக்கணும்.
கிளாசிக்கலோ, வெஸ்டர்னோ எதுவும் தெரியாத என்னைப் போன்ற பல பாமரர்களுக்கான இசைதான் இது.
இசைக்கான வித்து நல்வித்து. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’.
அதிலிருந்து சில பகுதிகள் இப்பாடல் காட்சியோடு தொடர்புடையவை கீழே சிறிது தந்திருக்கிறேன்.
"அங்கே யாருமில்லை” என்ற அர்த்தத்தில் அவள் உதடு பிதுங்கிற்று.முகம் பளபளவென்றிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு கன்னத்தில் வீசிக் கொட்டிற்று.காதின் முன் மயிர் சற்று அதிகமாகவே கீழே இறங்கியிருந்தது, முகத்தின் களையை இன்னும் உயர்த்திவிட்டது. அந்த முகம் அழகி என்று சொல்வதே, இந்த இறக்கத்தால்தானோ என்னவோ! முகத்தில் ரோஜா நிறப் பவுடர் குளுகுளுவென்று கமழ்ந்தது. தலையில் வைத்திருந்த பூவின் ஓரம் வெள்ளையாக எடுப்பாகத் தெரிந்தது. பளீர் என்று மஞ்சள் குங்குமம். மூக்கில் ஒரு வைரப்பொட்டு நீலமாக இறைத்தது...... தங்கம்மா...
"நீ சோதனை செய்தாய் நான் தோற்றுவிட்டேன்., என்னைச் சோதனை செய்ததில் உனக்கென்ன பெருமை? சிங்கம் பூனையோடு பலப்பரீட்சை செய்வதுபோல்தான் இது. ஆனால்...அதாவது... என்ன. இனிமேல் நான் அஜாக்ரதையாக இருக்க மாட்டேன். நேற்ற் இரவைப் போல் வெளிக்கதவைத் தாழிட்டு விடுவேன். மதில் காவலா, மனம் காவலா என்று சிரிப்பதுண்டு சிலர். ஆனால் உள்கதவும் திறக்காது என்பதற்கு அடையாளம்தான் வெளிக்கதவு மூடியிருப்பதும், வெளிக்கதவு மூடியிருந்தால் உள்கதவு திறவாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.”.........பாபு
“நேத்தி ராத்திரி நான் வந்து ஜன்னலில் நின்று தொண்டை வறளக் கத்தினேன். கதவைத் தட்டினேன்.நீங்கள் ஒன்றுக்கும் எழுந்திருக்கவில்லை. எப்படித்தான் இவருக்குத் தூக்கம் வருகிறதோ என்று நினைச்சுண்டே நின்னேன்.எனக்குத் தூக்கம் வரவில்லையே! எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஒரு பொம்மனாட்டி மானத்தை விட்டு விட்டு எத்தனை நாழி ஒண்டியாக நின்னு கத்துகிறது.நீங்கள் கதவைச் சாத்திண்டு தூங்கினதுமே எனக்குப் பயமாயிருந்தது.உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னுதான் பயமாயிருக்கு....................”.........தங்கம்மாவின் கடிதம்...
இப்போது பாடல் கேட்டு, முள்ளை ஏற்றிக் கொள்ளுங்கள்.