Monday, June 29, 2009

வா... காத்திருக்க நேரமில்லை....

 

        கிணுகிணுவென முணுமுணுத்த செல்ஃபோனின் சிவப்புப்பொத்தானை, அரைகுறைப்பார்வையிலேயே இனங்கண்டு அழுத்தி அலாரத்தின் வாயை அடக்கினான்.மறுபடிக் கண்களை மூடி, முடியாமல் போன கனவின் சுகத்தினைத்  தொடர முனைந்தான்.தோல்வியுடன் தூக்கத்தைத் தொடர்கையில் மறுபடி ஒரு இனிய இடைஞ்சல் வந்தது குறுந்தகவல் நுழைவொலியுடன். ஒரு நொடி யோசித்துப் பின் உள்ளுக்குள் குறுகுறுப்பு ஏற்படுவதை உணர்ந்து, போர்வையுடன் உறக்கத்தையும் உதறித்தள்ளினான்.செல்ஃபோனைக் கையிலெடுத்து மெஸேஜைப் படிப்பதற்குள் அது செல்லஃபோனாகியிருந்தது.
         ‘4 days over.3 more days left for dream. now get up and go to c ur 1st wife.good morning dear'
  நோக்கியாவின் மானிட்டரில் கல்வெட்டுக்களாய்த் தெரிந்த எழுத்துக்களைக் கோர்த்த விரல்களுக்குச் சொந்தக்காரி சுஹாசினி.இவனுக்கு சுஹா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு...இவன் பேரைச் சொல்லவே இல்லையே..?!
             வன் கார்த்திகேயன்.கால் செஞ்சுரி அடிக்க இன்னும் நாலு மாசம் காத்திருக்கணும்.சுஹா சொன்னமாதிரி இவனோட முதல் கல்யாணம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில ,ஒரு பன்னாட்டு நிறுவனத்தோட நடந்தது. சில ஆயிரங்கள்ல கிரெடிட்டான சம்பளம்,இவனோட ஸ்மார்ட்னெஸ்னால ஓரிரு வருஷங்களிலேயே பல ஆயிரங்களா மாறிடுச்சு.மாசத்துக்கு ஒரு பீரும்,வாரத்துக்கு 4 சிகரெட்டும் பிடிக்கிறவங்க, நல்ல பையனுங்கன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இவனையும் தாராளமா நல்ல பையன்னு சொல்லிக்கலாம். வேலையில இருந்த சாதுர்யம், பெண்களுடன் பழகுவதில் இல்லாததால் பல பெண்கள் நல்ல நண்பனை இழந்துட்டாங்க.சராசரி உயரம்,நிறம்,மேலுதட்டில் மேல்பகுதியை மட்டும் மறைக்கும் மீசை(டேய்...மீசையைக் கொஞ்சம் டிரிம் பண்ணுடா..கூச்சமா இருக்கு’....கூடல் பொழுது கட்டளைகளைக்கூட சட்டை செய்ய வைத்தது மீசைமேல் இவன் கொண்டிருந்த ஆசை),அலுவலக நேரத்தில் மட்டும் இன் -ஷர்ட்,ஷூ சகிதத் தோற்றம்,மற்ற நேரங்களில் கேஷூவல்ஸ்,செமி ரிம்லெஸ் கண்ணாடி(ஸ்டைலுக்கு அல்ல).இது போதும் இவனுக்கு.

          ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு ,சுஹாசினி பி.காம்மோட (22ஐத் தொடும் வயது,இடையுரசும் கூந்தல்,பாலுமகேந்திரா பட ஹீரோயின்கள் போல திராவிட நிறம்,நல்ல களை,இவனளவு உயரம்,இவனை விட அதிக வாய்) திருமணம் ஆச்சு.தூரத்துச் சொந்தம்தான். மஞ்சள் கயிற்றின் மகிமையால் தொட்டுக்கொள்ளும் சொந்தமாயிற்று.முதலிரவில் இருவரும் அறிமுக உரை நிகழ்த்தியதிலேயே பொழுது விடிந்து விட்டிருந்தது.ஒன்றிரண்டு முத்தங்களில் முற்றுப்போனது உரை.நாளையும் இரவு வருமென உறுதியாகத் தெரிந்த காரணத்தால் உறங்கிவிட்டனர்.தொடர்ந்த ஓரிரு வாரங்கள் இரவில் பகலையும், பகலில் இரவையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.கொண்டாடினார்கள்.

        தற்குமேல் தொடர்ந்தால், தலைதீபாவளிக்கு விடுமுறை எடுக்க முடியாதென்பதால் இரு வாரம் கழித்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தான்.முதல் நாள் நரகம், அடுத்த நாள் உபநரகம். பின் சாலரி ஸ்லிப்பை மனதுக்குள் நினைத்துக் கொண்டும், ரிஸஷன் நேர நெருக்கடியை உணர்ந்தும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.முன்பெல்லாம் 5 மணிக்கு ஆஃபீஸ் முடிந்தாலும், வேலையில் பெண்டிங் வைக்க விரும்பாமல் 8 மணி வரை இருந்து முடித்துவிட்டுப் போவான். இப்பொழுது 4.55க்கெல்லாம் செல்ஃபோனில் அலாரம் வைத்து, கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்கிறான்.

     காஃபி,முத்தம்,மல்லிகைப்பூ இட்லி,அப்பப்போ உப்பு கம்மியா சட்னி,இன்னும் கொஞ்சம் வேக வேண்டிய தோசைகள்,’அதுக்குள்ள கிளம்பணுமாசிணுங்கல்கள்,பைக் சாவி வாங்குகையில் உரசும் விரல்கள் எனக் காலைகள் கழிந்தன. சரவண பவன்,சத்யம்,பீச்,பானிபூரிக்கடை,வேறு வழியில்லாமல் கோயில்கள்,அவளின் சினேகிதிகள் வீடுகள் என மாலைகளும் கழிந்து கொண்டிருந்தன. பெற்றோர்கள் இவனுடன் இருந்தாலும் இவனின் வழிகளில் அவர்கள் வேகத்தடை எதுவும் விதிப்பதில்லை.நாட்கள் ஐஸ்கிரீமைப் போல இனிமையாகக் கரைந்துகொண்டிருந்தது. அவ்வப்போது சின்னச்சின்ன சண்டைகளும் ஹைக்கூக்களாய் முளைத்தன.அதுவும் இல்லையென்றால் தாத்தா சொல்லிவிட்டுப்போன ஊடல் காமத்திற்கின்பம்குறளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே...?!

   பெருவிழாவாகச் சென்றுகொண்டிருந்த இவன் வாழ்க்கையில் ஒரு திருவிழா திடுக்கிடவைத்தது. அது சுஹாசினியின் ஊர்க்கோயில் திருவிழா.பங்காளிச் சண்டையில் பத்து வருடங்களாக நடைபெறாமல் இருந்த விழா, இவன் நேரத்துக்கு ஏதோ ஒரு வெற்றிலை மெல்லும்,சந்தனம் பூசிய நெஞ்சில் துண்டு போர்த்திய வேலையில்லாத நாட்டாமையால் சமாதானம் பேசப் பட்டு நடக்க ஆரம்பித்துவிட்டது.இவனுக்கு அழைப்பு இருந்தும், அலுவலக அப்ரெய்ஸல் நேர ஆப்புகளால் போகமுடியவில்லை.இதைவிட்டால் ப்ரொமோஷனுக்கு இன்னும் ஆறுமாதம் தேவுடு காக்க வேண்டுமென்பதால், சுஹாவை மட்டும் அனுப்பி வைக்க முடிவெடுத்து விட்டான்.அவளுக்கும் ஊருக்குச் செல்ல விருப்பமில்லைதான். ஆனால் தொண்ணூறைத் தாண்டிய அவளது ஆயா, திருவிழாவைப் பேத்தியுடன் பார்த்துவிட்டு வைகுண்டம் டைரக்ட் ஃப்ளைட் பிடித்துச் செல்லவிருப்பதாக ஆசைப்பட்டதால்(ஆசையில மண்ணள்ளிப் போட..’-சபிக்கத்தான் முடிந்தது) சுஹாசினி ஊருக்குச் செல்ல வேண்டியதாயிற்று.அழைத்துப்போக அவளது அப்பா, தம்பியுடன் வந்திருந்தார்.மாமனாரை மனதிற்குள் வைய நினைத்தாலும், அவளை பெற்று வளர்த்த ஒரே காரணத்துக்காகச் சகித்துக் கொண்டான்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழியனுப்பச் சென்ற இவனைப் பார்க்கையில் கசாப்புக்கடைக்குச் செல்லும் ஆடு போல் தோன்றியது அவளுக்கு.பேருந்து கிளம்பும்முன் அவள், அப்பாவை தோசை வாங்க அனுப்பி விட்டாள். தம்பியிடம் வாந்தி வர மாதிரி இருக்கு. மாத்திரை வாங்கி வாஎன்றாள்.இவன் பதறியடித்து வாங்கப் போகையில்,ஒரு முறை முறைத்துவிட்டு,’இல்லங்க அவன் வாங்கிட்டு வந்துருவான்என தம்பியை அனுப்பி வைத்தாள். அவன் கிளம்பிப்போய், அவன் தலை மறைந்த உடன் கார்த்தி, காதைக்கொடுஎன இரகசியம் பேசும்சாக்கில் இவன் கன்னத்தில் முத்தமொன்று வைத்துவிட்டாள்.சோகத்திலும், சுகமான அவளின் இதழ் ஒத்தடங்களில் திகைத்துப் போனவனுக்கு பதில் மரியாதை செய்யக்கூடத் தோன்றவில்லை.அதற்குள் இரு கரடிகளும் வந்து விட்டிருந்தனர்.
   ‘மாப்ளே, கன்னத்துல என்ன ஒட்டியிருக்குஎனக்கேட்க நினைத்தவர், பின் சூழலைப் புரிந்துவிட்டு,’மாப்ளை உடம்பைப் பாத்துக்குங்கஎன மாற்றிச் சொல்லிவிட்டுச் சென்றார்.

     சில சமயம் வாழ்க்கை கூட சினிமேடிக்கா இருக்கும். இல்லேன்னா, பஸ் கிளம்புறப்போ எஃப்.எம்மில் ஏதோ ஒரு கணேஷ், தன்னோட சேராமப் போன மூணாவது காதலிக்காக கஷ்டப்பட்டு டெடிகேட் செஞ்ச இதயம் போகுதேபாட்டு கேட்டிருக்குமா..?! ரொம்ப ஃபீலிங்கோட வீட்டை நோக்கிப் போனான்.

    ‘நல்வரவுசொன்ன கால்மிதியைக் கடுப்புடன் மிதித்தான்.இவன் முகம் பார்த்தே, அமைதியாக அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர் பெற்றோர்.அவர்களுக்குத் தெரியாததா என்ன?!
  காற்றில் பறந்த செய்தித்தாள்களின் படபடக்கும் சத்தம் கேட்டது.
‘கார்த்தி... காலையில் பேப்பர் வந்ததும் படிக்கிறேனோ இல்லையோ, எடுத்து ஆசைதீர மோந்து பார்த்துடுவேன். காலையின் ஃப்ரெஷ்னெஸ்ஸ அதுல ஈஸியாத் தெரிஞ்சுக்கலாம்.’
 இப்போது எடுத்து நுகர்ந்து பார்த்ததில் வாசம் போய்விட்டிருந்தது.

 தண்ணீர் குடிக்க ஃபிரிஜைத் திறந்தான்.
’கார்த்தி...அடிக்கிற வெயிலுக்கு பேசாம ஃப்ரீஸர்ல போய் உட்காந்துக்கலாம்ன்னு தோணுது’
‘சரி நானும் வந்துடுறேன்.சிம்லாவுக்கு போன எஃபெக்ட்ல ஹனிமூன் நடத்திடலாம்’
‘நீ வேணாம். வந்தா ஃப்ரீஸர்ல சூடு ஏறிடும்...’
குடித்த தண்ணீர் தாகம்தான் சேர்த்தது.

 டந்த சில வாரங்களாக வீட்டில் லேப்டாப்பை ஓப்பன் செய்ததே இல்லை. இன்று ஓப்பன் செய்தான்.யூசர் நேம்,பாஸ்வேர்டு இரண்டும் அவள்தான்.டெஸ்க்டாப் சுஹாசினியை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான்.ஐந்து நிமிடங்களில் ஸ்கிரீன்சேவராக வந்த இன்னொரு சுஹாசினி அதைக் கட்டம்கட்டமாகக் கலைத்துச் சென்றாள்.
   அவளில்லாத படுக்கை, இராணியில்லாப் பல்லாக்கானது.அவளுக்கு எல்லாமே நீட்டாக இருக்க வேண்டும்.ஏதோ விரிப்பானை, ஏனோதானோவென பெட்டில் விரித்து, உறை மாற்றாத தலையணைகளை அதன்மேல் கிடத்தித் தூங்கிக்கொண்டிருந்தவனை அவள்தான் மாற்றினாள்.இரசனையுடன் விரிப்பான் தேர்ந்தெடுத்து, அதற்கு மேட்ச்சாக தலையணை உறைகளை மாற்றி அழகூட்டினாள். பின் நின்றவாறு கேட்டாள். ‘நல்லா இருக்கா...?’
 ‘கொஞ்சம் நீயும் வந்து உட்காரேன்’
உட்கார்ந்தாள் சற்று ஒய்யாரமாக. ‘இப்போ அழகா, செக்ஸியா இருக்கு’ என்றான்.
அப்போது அவள் திருகிய காதினை இப்போது தடவிப்பார்த்துக் கொண்டான்.
காலைகளின் வளையல் சத்தம் இல்லை.கொலுசின் சிணுங்கல் இல்லை.அவள் மேனி சேர்ந்ததின் பின் வரும் லக்ஸ் வாசமில்லை.
   வனின் தனிமைப் பெருமூச்சுக்களில் வீட்டின் உஷ்ணம் கூடியிருந்தது.ஒரு வாரம்தானே சமாளித்து விடலாமென இருந்தவனுக்கு, வாரத்துக்கு ஏஏஏஎழு நாட்கள் எனும் உண்மை உறைக்க ஆரம்பித்தது.அதற்கு 168 மணி நேரங்கள் இருக்கின்றன என்ற உள் உண்மையும் இவனின் வேதனையை அதிகரித்து, இவனின் நாட்கள் நத்தையாக ஊற ஆரம்பித்த நான்காவது நாளின் முடிவில் வந்த எஸ்.எம்.எஸ்தான் முதல் பத்தியில் நாம் கண்டது. 
   பெரும்பகுதி நரகம் தாண்டிவிட்ட மகிழ்வில் அலுவலகம் சென்றான். உள்ளே செல்ஃபோன் எடுத்துச் செல்லக்கூடாது எனும் நிர்வாகத்தின் அறிவிப்புப் போர்டை வெறித்தவாறு உள் நுழைந்தான்.சற்று வேலைகளில் மூழ்கியபின் சுஹாவின் ஞாபகங்களின் அடர்த்தி குறையத்தான் செய்திருந்தது. எனினும் அவ்வப்போது அவளைப் பற்றிய நினைவுகள், இவன் தயாரிக்கும் எக்ஸெல் ஷீட் மற்றும் பவர்பாயிண்ட்டுகளில் பிழைகளாக மாறி மேனேஜரின் வசவுகளுக்கு இவனைத் தயார் செய்து விடும்.
   இன்னும் இரண்டு நாட்கள்தான். இன்று அலுவலகத்தில் ஒர் முக்கியக் கூட்டம். மேலாளர் இவனை நியமித்திருந்தார். ஒரு ஜாயிண்ட் வென்சர் பத்தின மீட்டிங். இவன் பேசினால் பழமாக்கிவிடுவான் என நிர்வாகத்திற்குத் தெரியும். இதனை முடித்தால் இவனின் பேஸிக் ஸ்கோர் கார்டில் பச்சைநிறங்கள் அதிகமாகி இவனின் பதவி உயர்வினைக் கையில் கோர்த்துவிட்டுப் போய்விடும். அதற்கான கோப்புகளில் மூழ்கி, தேவையான பாயிண்ட் முத்துக்களை எடுத்துக் கொண்டிருந்தவனுக்கு , அவுட்லுக்கில் மெயில் வந்ததாக கணினியின் ஓரத்தில் மெசஞ்சர் சொல்லிச் சென்றான். அனுப்பியது அவன் கல்லூரி நண்பன். ஃபார்வர்ட் மெயில்தான். எப்போதும் லேட்டாகப் படிப்பவன், இன்று ரிலாக்ஸூக்காக அதைத் திறந்தான்.
   பிசினஸ் பத்தியும், வாழ்க்கை பத்தியும் புத்தகம் எழுதுற சி.ஈ.ஓக்கள்ல் ஏதோ ஒரு ஆளு சொன்ன வாசகம் வந்திருந்தது.
    “உன் கையில் 5 பந்துகள் இருக்கு. குடும்பம்,படிப்பு,வேலை, நண்பர்கள்,சமுதாய நட்பு. இதுல ‘வேலை’ன்றது இரப்பர் பந்து மாதிரி. எப்படிப்போட்டாலும் மேலெழும்பி வரும். மற்ற பந்துகள் கண்ணாடிகளாலானது. போட்டா ஸ்கிராட்சோ,கீறலோ, ஏன் உடைந்து போகக் கூடச் சாத்தியங்கள் இருக்கு”
     மற்ற நாட்களில் பத்தோடு பதினொன்றாகப் போக வேண்டிய இது மாதிரி மெயில், இன்று ஏனோ அவனுக்குள் ஒரு அதிர்வையும், உள்ளொளியையும் கொடுத்தது.

      நேராக மேனேஜர் அறைக்குச் சென்றான்.ஏற்கெனவே எழுதி வைத்திருந்த லீவ் லெட்டரை அவரிடம் நீட்டியவாறு சொன்னான்,” உடம்பு சரியில்லை. ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்.”
    ‘என்னாச்சு உடம்புக்கு. .? ஏன் ரெண்டு நாள் லீவ்?’ -மேனேஜரின் கேள்விகளைஅவன் சாத்திவிட்டுப் போயிருந்த கதவுதான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.அதற்குள் அவனின் பைக் கோயம்பேடை நோக்கி விரைந்தது.
  மேனேஜர் லீவ் லெட்டரை எடுத்துப் படித்தார். காரணம் என்னும் இடத்திற்கு எதிராக ‘பசலை’ என்றிருந்தது. குழம்பியவாறே தலையைச் சொறிந்து கொண்டிருந்தார்.   


                                      *****************************************************************************************
பி.கு: நண்பர் இரா. வசந்தகுமார் மற்றும் கே.ரவிஷங்கர் சார் இருவரின் அன்புத் தொல்லையில் அவசரமாக எழுதிய கதை இது. போற்றலும், தூற்றலும் மேற்கண்டவர்களுக்கே...:-)

Saturday, June 20, 2009

புராதன ஓவியம்

5

     எப்பவோ வரைந்த படம். கறுப்பு பால்பாயிண்ட் பென்னில் வரைய ஆரம்பித்தேன். முடிக்குமுன் மை தீர்ந்து விட்டதால்,சிவப்புப் பென்னில் ஓவியத்தை முடித்தேன். அப்படியே இங்கேயும்…

      ஓவியர் ராமுவின் ஓவியம் இது.இவரை நினைத்தாலே தினமணிகதிர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இவரின் கதாபாத்திரங்கள் நடுத்தர வர்க்கத்தைப் பிரதிபலிப்பார்கள். இவரின் ஓவியங்களில் கட்டைப்பிரேமிட்ட கண்ணாடி அணிந்த அப்பாவும், பெண்களுக்கு இவர் இடும் தாராளக் குங்குமமும் இன்னும் நினைவிலிருக்கிறது. தற்போது இவரின் ஓவியங்களை அதிகம் காணமுடிவதில்லை.

பி.கு: இப்பதிவு ஒரு சோதனைப் பதிவு. விண்டோஸ் லைவ் எடிட்டரில் எழுதி, அப்படியே பதிவிட்டது. பிளாக்கருக்குள் நுழைய வேண்டியதில்லை.சந்துக்குள் விளையாடும் கிரிக்கெட் போல, பிளாக்கரில் பதிவினை எழுதுவதைவிட , கிரவுண்டில் விளையாடுவது போல் இங்கு சற்று வசதி அதிகம்போல் தோன்றுகிறது. புதுப்பொண்டாட்டி சகவாசம். போகப்போகப் பார்க்கலாம். இது பற்றிய விபரங்களுக்கு நண்பர் எழிலின் பக்கம் சென்று வாருங்கள்.

Tuesday, June 2, 2009

இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்

என்னை இன்னமும் தாலாட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு அன்னை. என் இதய அறைகளில் ஆக்ஸிஜனை அனுமதிக்க மறுக்கும் அறைகள் கூட காற்றில் கலந்திருக்கும் உன் இசையைத்தான் பூச்செண்டோடு வரவேற்கின்றன.நீ தொட்டுப் போட்ட மெட்டுக்களில்தான் எத்தனை எத்தனை குட்டி உலகங்கள் எனக்குள் திறந்தன.பெண்ணைக் காதலித்ததில்லை. உன் பாடல் கேட்கையில் காதலிப்பவனை விடவும் அதிக அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன்.என் கண்களின் சுரப்பிகளைத் தூண்ட உன் வயலினின் ஓரிரு மீட்டல்களே போதுமானது.உன் குழலும்,தபேலாவும் கட்டிவிட்ட சிறகுகளில்தான் கால வெளியெங்கும் மிதக்கிறேன்.உன் ஸ்வர எழுத்துக்களில் நகரத்து இறுக்கமும் தெரியும், கிராமத்துத் தெருக்களும் விரியும்.உனக்கென்ன ஆயிரம் சாமி உண்டு...ஆசிரமம் உண்டு...தியானமுண்டு....உன்னை எண்ணும் எனக்கு இவை எல்லாமாய் நீயுண்டு... உன் பரவெளிப் பேரானந்தம் அங்கே...என் பேரானந்தம் உன்னிசையில் இங்கே....இன்று ஜூன் 2ம் நாள், இசைக்குப் பிறந்தநாள்...செவிகள் நல்லிசைக்குத் திறந்தநாள்...வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்றால் அரசியல் கோஷமாகிவிடும், இச்சிறு பதிவில் உனக்காகச் சில வார்த்தைகளை மட்டுமே என்னால் கோர்க்க  முடிந்தது.

இசையோடு இணைவோம்.....

பி.கு: தாமத வாழ்த்திற்கு மன்னிக்கவும்.
ஓவியம் மீள்பதிவுதான்.