அவளைப் பற்றிச் சொல்லணும்னா செமை கட்டைன்னு சொல்லலாம்.கொஞ்சம் பருமன்னு கூட நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு அப்படித் தோணலை.நல்லாப் பாடுவா. நல்ல குரல் வளம். ஆம்பிளைக் குரல்ல கூட பாடுவான்னா கேட்டுக்குங்களேன்.நான் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்பவே அவளுக்காக உருக ஆரம்பிச்சிட்டேன். ஆனா தொட்டா மட்டும் ‘ஷாக்’ தான்.பின்ன என்னங்க... வாங்கி 25 வருஷத்துக்கு மேலாச்சுனா, ஷாக் அடிக்காம இருக்குமா ‘வால்வு டைப் ரேடியோ’??!!
என்னதான் சிஸ்டத்துலயும், ’ஐ பாடு ’ லயும் ஆயிரத்துச் சொச்சம் பாட்டுக்களை நுணுக்கி நுணுக்கிச் சேர்த்து வச்சு, நினைக்கிற நேரத்துல பாட்டு கேட்டாலும் வானொலியின் சுகம் வருவதில்லை. இப்போ இருக்கிற வாழ்க்கைச் சிக்கல்களுக்கு இடையில தேடியெடுத்துப் பாட்டு கேட்க முடியாத நம்ம இயலாமை கூட ஒரு காரணமா இருக்கலாம். சரி பண்பலையாச்சும் கேட்கலாம்னா, நம்ம காதுக்குள்ளயே கடை போடுற விளம்பரங்கள், தொகுப்பாளினி(ளர்) யோட முக்கல், முனகல்கள், இதையெல்லாம் தாண்டிப் போய்க் கேட்டாலும் காதுக்குள்ள ஈயத்தைக் காய்ச்சி ஊத்துற மாதிரியான பாட்டுக்கள்தான் கேட்க முடியுது.
அதனால திடீர்ன்னு ஒரு கொசுவர்த்தியைச் சுத்திப் போட்டுடலாம்ன்னு தோணுச்சு.இத நீங்களும் கொஞ்சம் அனுபவப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். முதல்ல வானொலியில பாட்டுக்கள் கேட்குறதை விட நாடகங்கள் கேட்பேன். இரவு 7 மணிக்கு மேல் இலங்கை வானொலி கேட்காது.அதன்பின் மதுரை வானொலியில் இரவில் போடும் நாடகங்களுக்காகத் தவமிருப்பேன்.
மதுரை(உட்பட எல்லாத் தமிழக வானொலிகளிலும்) வானொலியில் ஒவ்வொரு வருடமும், ஒரு வாரத்திற்கு இரவு 9.30 முதல் 10.30 வரை அகில இந்திய நாடக விழா ஒலிபரப்புவார்கள்.ஒவ்வொரு நாளும் ஒரு வானொலி நிலையத்தின் நாடகம் ஒலிபரப்பாகும்.தூங்கி வழியும் கண்களோடு காத்திருப்பேன்.ஒவ்வொரு செவ்வாய் இரவும் 'மனோரஞ்சிதம்' எனும் தலைப்பில் பழைய பாடல்கள் போடுவார்கள்.9.30 முதல் 10.30 வரை. கண்ணதாசன், எம்.எஸ்.வியின் பாடல்கள்தான் பெரும்பாலும்.
அப்புறம் நாடகக்குரல்களில் என்னால் இன்றும் மறக்க முடியாத குரல்,இப்போது கூட என் காதுகளைச் சுற்றுவது போல் ஒரு பிரமை...அப்படிஓர் கணீர்க்குரலுக்குச் சொந்தக்காரர் மறைந்த நாடக நடிகர் ஹெரான் ராமசாமி அவர்கள்.பெரும்பாலும் சரித்திர நாடகங்கள்தான்.கெட்டியான எருமை மாட்டுப்பாலில் குடித்த ஸ்ட்ராங்கான காஃபி போல் சுவையான குரல் அவர் குரல்.நீங்கள் 'யார்?' படம் பார்த்திருக்கிறீர்களா..? அதில் முதலில் வந்து இறந்துவிடும் முனிவர் வேடத்தில் நடித்தவர் அவர்தான்.
ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி சமீபத்தில் கேட்க ஆரம்பிக்கும் குறள்,’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ அதன் பின் தொடர்ச்சியாக ‘மண்ணும்,மணியும்’ ஒலிபரப்பாகி,பயிர், உரம்,பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும். பின் செய்திகள்.திருச்சி வானொலி அவ்வப்போது 7.10க்கும் 7.15க்கும் இடையில் பாடல் கூட ஒலிபரப்பும். ஆனால் மதுரை வானொலி அப்படியே தூர்தர்சன் மாதிரிதான்.
இலங்கை வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அத்துப்படி. அப்துல் ஹமீதுவின் ‘பாட்டுக்குப் பாட்டு’ ஃபேவரைட்.புதுப்புதுப் பாடல்கள் கேட்கலாம். பண்டிகை சமயங்களில்தான் காதை அடைக்கும் ஜவுளிக்கடை விளம்பரங்கள் வரும்.
நான் முன்பே சொன்னதுபோல எங்கள் வீட்டு வானொலி தொட்டா அவ்வப்போது ‘எர்த்’ அடிக்கும். ரெடியா ஒரு டெஸ்டர் வச்சிருப்பேன். அதவச்சுத் தொட்டுத்தான் வானொலியின் பதம் பார்த்துக் கை வைப்பேன்.அதோட மட்டுமில்லாம சோதனை ஆராய்ச்சியெல்லாம் பண்ணிப் புதுப்புது ரேடியோ ஸ்டேசன்லாம் கண்டுபிடிப்பேன்.அதில் வெளிநாட்டு வானொலி(சிங்கப்பூர் ஒலி95.4(....?),பிபி.சி,சீனவானொலி) ஒலிபரப்புகளைக் (கரகரப்புடன்) கேட்பதில் இருந்த சுகம், இப்போது ஒரு தொடலில் துல்லிய ஒலிபரப்பு கேட்பதில் இருப்பதில்லை.இவற்றைக் கேட்பதற்காக வானொலியின் குமிழிகளை நோண்டி,நொங்கெடுத்தது(தாத்தாவிற்குப் பயந்து கொண்டே)இன்று நினைவுக்கு வருகிறது.
எனது சிறுவயது கனவு டேப் ரெக்கார்டர் வாங்குவது. கல்லூரிக்காலம் முடியும் வரை இயலவில்லை. வேலைக்கு வந்தபின்தான் நிறைவேறியது.ஆனால் அதற்காக அலைந்த பருவங்களின் தொலைந்த கன்வுகளைத்தான் என்னால் மீட்டெடுக்க முடியவில்லை.தற்போதைக்கு நினைவுகள் மட்டுமே மிச்சமாய்...