Thursday, January 14, 2010

புவி ஆராய்தல்...-உரையாடல் கவிதைப் போட்டிக்காக

உலக வரைபடத்தில் கடலுக்கு நீலம்
கூட்டிக் கொண்டிருந்த லச்சுவிடம் கேட்டேன்
என்னை மாதிரி எஞ்சினியராகப் போகிறாயா என
பென்சிலை தாடையில் தட்டி யோசித்துச்
சொன்னாள் பூமி ஆராய்ச்சி பண்ணப் போவதாக
என்னவெல்லாம் செய்வாய் கேட்பது எளிதுதானே
இன்னும் எளிதாகப் பதில் வந்தது
வீடு, காடு,மலை,ஆறு,கடல்,மீனு,கிணறு,
சிங்கம், கரடி,யானை,கிருஷ்ணா,சோறு,நிலா,
வானம்,சூரியன்,பார்பி பொம்மை,டிவி
இன்னும் பலவற்றைக் கையசைவில்
காட்டி ஆராயப் போவதாகச் சொன்னாள்
நிலா,சூரியன் எல்லாம் பூமியில் இல்லையே
பிறகெப்படி பூமியில் வந்தது கர்வக் கேள்வியுதிர்த்தேன்
பென்சிலால் என் தலையில் தட்டியவாறு
உனக்குத் தெரிந்த பூமி அவ்வளவுதான்
சொல்லிவிட்டு ஆராயத் தொடங்கினாள்
அவளது பூமியை...

குறிப்பு: உரையாடல் அமைப்பின் கவிதைப் போட்டிக்காக எழுதப் பட்டது

Saturday, January 2, 2010

ஐம்பதாவது பதிவு...தமிழ்மண விருதுத் தேர்வு...அவதார்...இன்ன பிற...

    சென்ற வருடப் புத்தாண்டு ரெயில் பயணத்திலேயே கழிந்ததால் வருட முதல் நாளே குளிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வருடம் அவ்வாறு அமையவில்லை.வீட்டிலேயேதான் இருந்தேன். நண்பர்கள் புடைசூழ இரவு சிறப்பு சிக்கன் விருந்து( நாங்களே தயாரித்தது) மற்றும் இதர திரவ சைட் டிஷ்களுடன் கோலாகலமாகப் போனது.சென்ற வருடம் எதுவும் புத்தாண்டு சபதம் போடவில்லை. அதைத் தொடர்வதே சுகமெனப் பட்டதால் இவ்வருடமும் நோ ரெசொல்யூசன். வேறெங்கும் வெளியில் செல்ல வில்லை.தொலைக்காட்சிகளிலேயே விதவிதமான பெயர்களில் அரைகுறை மான்கள்,மயில்கள் ஆடியதையே பார்க்க நேர்ந்துவிட்டது. அதைவிடக் கொடுமை குழந்தைகள் நடனநிகழ்ச்சியில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களும், அதற்கு அவர்கள் கொடுக்கும் விரக தாப முக,உடலசைவுகளும்தான்.இதையெல்லாம் பார்த்துட்டு ‘தம்பி’ மாதவன் மாதிரித்தான் கத்தினேன். ‘இப்ப என்ன செய்ய?’ முடிப்பதற்குள் தெறித்து வந்தது நண்பர்களின் பதில் ‘*******’

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

     2008ம் ஆண்டு மத்தியில் ஏதோ பொழுதுபோக்காக ஆரம்பித்த பதிவெழுதும் பழக்கம் ஒன்றரை ஆண்டு கடந்தும் அதே நிலையில் இருப்பது மகிழ்வே. எதைப் பதிவெழுதுவது என்று சிந்திப்பதை விட எதை எல்லாம் எழுதக்கூடாது என்று சிந்தித்ததால், வெகு வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஐம்பதாவது பதிவு வந்துவிட்டது.அதுக்காக எழுதிய 50 பதிவுகளும் உருப்படியானதா என்றெல்லாம் கேட்கக் கூடாது.எனது அளவுகோல், என்னை ஒரு வாசகன் என்ற நிலையிலேயே பிடித்து வைத்திருப்பதால் இதுவே தொடரட்டும் என விட்டுவிடுகிறேன்.இதுவரை ஊக்கம் தந்து உதவிய அனைவருக்கும் நன்றிகளை இத்தருணத்தில் தந்துவிடுகிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

   ந்தாண்டு தமிழ்மண விருதுகளுக்குக் கொஞ்சம் போட்டி குறைந்த ‘ஓவியம்/ஒளிப்படம்’ பிரிவுகளுக்கு நான் பரிந்துரை செய்த ‘ரமணர் கோட்டோவியம்’ இடுகை முதல்  கட்ட பதிவர் வாக்கெடுப்பில் தேர்வாகி டாப் டென்னில் வந்துள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி.பார்க்காததால் வாக்களிக்காமல் போனவர்களுக்கும் நன்றிகள்.
   இரண்டாவது கட்ட வாக்கெடுப்பிலும் தங்கள் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.(ஜனநாயகக் கடமையா...அப்படின்னா என்ன என்று கேட்பவர்களின் ப்ளாக் ஹேக் செய்யப் படுவதாக...)அதற்கான விபரங்கள் இங்கே...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

   நேற்றே போகலாம் எனத் திட்டமிட்டும், ஷோ டைம் சரிவர அமையாததால் இன்றுதான் போக முடிந்தது ‘ அவதார்’ படத்துக்கு. எல்லோரும் முப்பரிமாணத்தில் அனுபவித்துப் பார்க்க, என்னால் ஒரு பரிமாணம் குறைவாகத்தான் பார்க்க முடிந்தது. ஆம். இந்தோரில் எந்த ஒரு தியேட்டரிலும் 3D முறையில் திரையிடவில்லை.எல்லா ‘நவ்விக்களும்’ ‘ஹை,ஹை’ என்று ஹிந்தியில்தான் பேசிக் கொல்கிறார்கள்.கதை முன்பே தெரியுமென்பதால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தமிழ், தெலுங்கு ஆக்‌ஷன், செண்டிமெண்டுகளுக்குச் சற்றும் சளைத்ததில்லை இக்கதையும். ஆனால் திரையில் பார்த்த அனுபவம்..பரமசுகம்.இதெல்லாம் நிஜமா இல்லை CG யா...’நவி’க்களாக வருபவர்கள் மனிதர்களா இல்லை அனிமேஷன் ஆ...இப்படிப் பல ’ஆ’க்களால் வாய் பிளந்து கொண்டது எல்லாம் படம் முடிந்து வெளியில் வருகையில்தான். படம் பார்க்கையில் எதுவுமே தோன்றவில்லை.ஒருவித மாயாலோகத்தில் இருப்பது போன்ற உணர்வுதான்.மிஸ் பண்ணிவிடாதீர்கள். தியேட்டரில் மட்டுமே பார்க்கவும்.படம் முடிந்து வருகையில் நண்பன் சொன்னான்,’ செமப் படம்டா. எனக்கே வாலு முளைச்சு சுத்துறமாதிரி ஒரு ஃபீலிங்’ என்று.அடுத்தவன் முடித்து வைத்தான்,’இதென்னமோ நீ புதுசாச் சொல்ற’ என்று.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

  ந்த மாதிரி கண்டது, கழியது எழுதினா அதுக்கு சரவண பவன் மெனுலிஸ்ட்ல இருக்கிற மாதிரி ஏதாச்சும் பேர் வைக்கணுமாமே..அதெல்லாம் இதே ஃப்ளேவர்ல மாசத்துக்கு ஒண்ணு,ரெண்டு  எழுதுறவங்களுக்கு... நாமதான் அடுத்த கண்டது, கழியது 100வது பதிவாத்தான் போடப் போறோம்.2011க்குள்ள ஒரு பேரு சிக்கிடாது. பார்ப்போம்.

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...