Friday, April 24, 2009

’அடேங்கப்பா’ அசைவ உணவகம்

        ஷ்ஷ் அப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே.கரூர் போய்ச் சேர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.’பசி வந்தாப் பத்தும் பறந்து போகும்’ ன்னு சொல்லுவாங்க.ஆனா  பஸ் பறந்து போக மாட்டேங்குதே என்ற கவலை எனக்கு.
     எப்போல்லாம்  ரொம்பத்தூரம் பயணம் போறேன்னோ, அப்பல்லாம் வழித்துணைக்கும், வாய்த்துணைக்கும் சேர்த்து ரெண்டு,மூணு கடலைமிட்டாய் எடுத்துட்டுப் போவேன். ஒரு மிட்டாய் சாப்பிட்டாலே, உடனடி எனர்ஜி கிடைக்கும். கூடவே கொஞ்சம் தண்ணீர் குடிச்சா, பசி போற இடம் தெரியாது.அஞ்சு நிமிஷம் அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்கலாம். அதுக்கப்புறம் உற்சாகமாத் தூங்கலாம். இதுதான் என்னோட வாடிக்கை.அதுக்கு ஒரு அரசுப்பேருந்து நடத்துனர் ஆப்பு வெச்சிட்டார்.


               மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுல ,பஸ் ஏறுறதுக்கு முன்னாடி ,விகடனும் ,குமுதமும் வாங்குனேன். கூடவே ஃபேவரைட் கடலை மிட்டாயும் வாங்கிட்டேன். வாங்கிட்டு சேலம் போறதுக்காக நின்ன பஸ்கள்ல முதலாவதுல ஏறி ஜன்னலோர இருக்கையும் போட்டுட்டு, பெரிய பேக்கை மேலேயும், சின்ன பேக்கை கையிலயும் வச்சிக்கிட்டேன்.பஸ் கிளம்புறதுக்கு முன்னாடியே சிறு கடனைக் கழிச்சுட்டு வரலாம்ன்னு வெளிய வந்தென். அப்போதான் இன்னொரு அரசுப் பேருந்து,. நானிருந்த பஸ்ஸ முந்திட்டுப் போயி முன்னாடி லேண்ட் ஆச்சு. பார்த்துட்டுருக்கும்போதே, இந்தப் பஸ்ஸோட நடத்துனர் வந்து விட்டார்.
   “ சேலம் போறவங்கள்ளாம் முன்னாடி நிக்குற பஸ்ஸுல ஏறிக்குங்க. இந்த பஸ் செட்டுக்குப் போகப் போகுது” -ன்னார்.
   ‘அடங்கொய்யால.... முன்னல்லாம் பஸ் நகர்ந்ததுக்கப்புறம்தானடா உயிரெடுப்பீங்க.. இப்பல்லாம் அதுக்கு முன்னாடியேவா..?!’ -ன்னு நினைச்சுக்கிட்டே, இன்னொரு பஸ்ஸுலயும் ஜன்னலோர இடம் பிடிக்கணும்னு அவசரத்துல , உள்ள போய் பெரிய பேக்கை எடுத்துட்டு வெளியே வந்தேன். பேக்கில சிப் சரியாப் போடாததால சைடுல வச்சிருந்த என்னோட க.மி. அந்தப் பஸ்சோட அப்பர் பெர்த்லேயே, அதோட டிக்கட்டைக் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டது எனக்குத் தெரியலை.


             இந்த விஷயம் திண்டுக்கல் போறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, அங்கேயே  இடைக்கால நிவாரணத்துக்காக ஏதாவது வாங்கியிருக்கலாம்.பஸ்சுல ஏறினதுல இருந்து என் சீட்டுக்கு நேர் எதிர் சீட்டுக்கு முன்னாடி ஓரத்துல உக்காந்திருந்த கேரள ஃபிகரு    (மொழியே தேவையில்லை கண்டுபிடிக்க. முழியும், முடியும் போதாதா...என்னது வேறொண்ணும் இருக்கா.. அதை ‘ரன்’ படத்துக்குப் பாட்டெழுதுன முத்துக்குமாரைத்தான் கேட்கணும்) கடைக்கண் பார்வையையே எதிர்பார்த்திருந்ததுல என் கவனம் பேககிலும், புத்தகத்தின் மீதும் போகவில்லை. அதற்குள் திண்டுக்கல்லும் வந்துவிட்டது. கேரளாவும் போய் விட்டது.
 
          அதுக்கப்புறம் குமுதத்தை விரித்துப் பக்கங்களுக்குள் பார்வையை ஓடவிட்டேன். சமையல் பகுதியைப் பார்த்தபின் தான் பசி எட்டிப் பார்த்தது.சரி..நம்ம டிஷ்சை எடுத்துடலாம்னு பேக்ல கைவிட்ட போதுதான், கடலை மிட்டாய் என்னைக் கை விட்ட விஷயம் தெரிந்தது. முதலில் புன்னகைத்த பசி இப்போது பல்லிளிக்கவே ஆரம்பித்து விட்டது.
 
                இன்னும் அரை மணி நேரத்தில் கரூர் வந்து விடும். பஸ் எப்படியும் கால்மணி நேரம் நிக்கும். டிஃபனே சாப்பிட்டுக்கலாம்னு என்னையும், வயிறையும் சமாதானப் படுத்திக்கிட்டேன்.பசிச்சா எனக்குத் தூக்கமும் வராது. வெளியே வேடிக்கை பார்க்கவும் மனசு வராது.அந்த அரைமணிநேரப் பயணமானது, ஏதோ பாலைவனத்தில் மூன்று மணிநேரம் பயணித்த அலுப்பைத் தந்தது.
 
           அப்பாடா... ஒரு வழியாக கரூருக்குள் பஸ் நுழைந்தே விட்டது. பஸ் ஸ்டேண்டிற்குள் நுழையும் முன்னரே, உள்ளே ஏறிய ஒருவர் கூவ ஆரம்பித்துவிட்டார். “ டீ, காபி, டிபன் சாப்பிடுறவங்கெல்லாம் இறங்கிப் போய் சாப்பிட்டு வாங்க. பஸ் இருபது நிக்கும்” -ன்னார். இந்த வார்த்தைகள் எனக்குள் அசரீரி போல் தோன்றியது.

             பஸ்ஸிலிருந்து இறங்கிப் பார்த்தால் , கண் முன் தெரிந்தது பெரிய ரம்பா படம் போட்ட போர்டு. ‘அடேங்கப்பா அசைவ உணவகம்’. வண்ண வண்ண சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட அந்தப் போர்டில் , மிகச்சரியாக ரம்பாவின் தொடைக்கு அருகில் ‘லெக் பீஸ் கிடைக்கும்’ என்ற வார்த்தை முடிந்திருந்தது.நல்ல ரசனைக்கார ஓவியர்ன்னு மனசுக்குள்ள பாராட்டிக்கிட்டே ஹோட்டலுக்கள் போனேன்.
   
              எப்பவும் விலைப் பட்டியல் இருக்கிற இடத்துக்கு எதிர்ல இருக்க மாதிரியான டேபிள்தான் என்னோட சாய்ஸ்.ஆனா  பஸ் ஸ்டாண்டுக்குள்ள இருக்க ஹோட்டல்கள்ல ,விலைப்பட்டியல், எண்ணுள்ள பில் இது போல ஜனநாயகமெல்லாம் எதிர்பார்க்க முடியாதுன்றதால ராண்டமா ஒரு இடத்துல உட்கார்ந்தேன்.
  
              எல்லா சர்வர்களையும் போலவே, டம்ப்ளருக்குள் அதிக பட்ச விரல்களுக்கு ஜலக்ரீடை செய்தவாறே அந்த சர்வரும் வந்தார். இம்மாதிரி ஹோட்டல்களில் நாம் விரும்புவதைக் கேட்பதைவிட , சர்வர் சொல்பவற்றில் இருந்து நமக்குப் பிடித்த உணவைத் தேர்வு செய்வதுதான் உத்தமம் எனத் தோன்றியதால் கேட்டென்.
      “என்னப்பா இருக்கு?”
     கேட்டு முடிப்பதற்குள் , அவர் பட்டியலிட்டவற்றைச் சொன்னால் இது தொடர் கட்டுரையாகி விடுமென்பதால், அதனை விட்டுவிடுகிறேன்..இரண்டு தோசை மட்டுமே ஆர்டர் செய்தேன். சொல்லி முடித்த இரண்டாவது நிமிடம் தோசைகள் அடங்கிய தட்டும், ஒரு கிண்ணத்தில் கிரேவியும் கொண்டு வைத்தார் சர்வர். சிவந்த கிரேவியும், மிதந்த எண்ணையும் பார்த்த நான்,’ அடடா, இங்க சால்னா சூப்பராக இருக்கும்’ என்றெண்ணி, உடனே, தோசையில் கவிழ்த்தேன். இரண்டு, மூன்று சிறு துண்டங்கள் உருண்டோடின.தொட்டுப் பார்த்தவுடன் தான் தெரிந்தது அது சிக்கன் துண்டுகளென.
 
               நான் அசைவ ஆசாமிதான். கிடைக்கிற கேப்புல எல்லாம் கெடாச் சோறு சாப்பிடுபவன்தான். ஆனாலும் இதுபோல் திடீர்க்கடைகளில் சாப்பிடுவதை விரும்பமாட்டேன். ஏன்னா இங்க ஒருதடவை வரும் கஸ்டமர் மறுமுறை வருவதற்கு நிகழ்தகவு மிகவும் குறைவென்பதால் தரம் எதிர்பார்க்க முடியாது. மேலும் அவர்கள் சொல்வதுதான் விலை.சொல்வதைக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.இவ்விரண்டிற்கும் பயந்துதான் சிக்கன் துண்டுகளை ,ராக்கி கட்ட வரும் ஃபிகர் போல வெறுப்புடன் பார்த்தேன்.
   
     சர்வரைக் கூப்பிட்டு,” நான் சிக்கன்லாம் சாப்பிட மாட்டேன். எடுத்துட்டுப் போ” என்றேன்.
       “ அய்ய, உன் எச்சிய சாப்பிட நாங்க உன் பொண்டாட்டியா?”-சர்வர்.
பேச்சு வார்த்தை முதல் சுற்றிலேயே தோல்வி கண்டதால், விதியை நொந்து சாப்பிட ஆரம்பித்தேன் பில்லைப் பற்றிய அடுத்த கவலையுடன். சிக்கன் பரவாயில்லை சிக்கன் மாதிரித்தான் இருந்தது(பல இடங்கள்ல காக்கா, குருவி மாதிரில்லாம் இருக்குமாம்..!)
  
          அப்பொழுது அருகிலிருந்த சேர்களில் இருவர் வந்து உட்கார்ந்தனர்.அவர்களையும், அவர்களின் பேச்சையும் கேட்கையில் புரிந்து விட்டது அவர்கள் உள்ளூர் என்று.ஆளுக்கு மூன்று தோசை ஆர்டர் பண்ணினார்கள். சரி அவர்களை எச்சரிக்கலாம் என நினைத்தேன். பின் நமக்கேன் வம்பு என விட்டுவிட்டேன்.
 
                நான் எதிர்பார்த்த மாதிரியே இரண்டு தட்டுக்களில் அவர்கள் கேட்ட தோசையும், இரு கிண்ணங்களில் கிரேவி(அ) சிக்கன் குழம்பும் வந்து சேர்ந்தது. வைத்துவிட்டு சர்வர் அடுத்த டேபிளுக்குச் சென்று விட்டார்.அதன் பின் நடந்ததுதான் நான் எதிர்பார்க்காதது.
           
              வந்த இருவரும் அவசரமாக கிரேவி கிண்ணத்திற்குள் கை விட்டு சிக்கன் துண்டுகளை எடுத்து, தோசைகளுக்கு நடுவில் பதுக்கிக் கொண்டனர். பின் சர்வரை அழைத்தனர்.
         “ஏப்பா, ஊருல திருவிழா. காப்புக் கட்டிருக்கு. அசைவம் சாப்பிட மாட்டோம். இத எடுத்துக்கிட்டு, சாம்பார்,சட்னி வச்சுட்டுப் போ”
       வந்த சர்வரும் எதுவும் பேசாமல் ‘மிஸ்ஸாயிடுச்சே’ என நினைத்துக் கொண்டே, சிக்கன்(..?) குழம்புக் கிண்ணங்களை திரும்ப எடுத்துக் கொண்டு, சாம்பார் எடுத்து வர உள்ளே சென்றார்.
  
             இதற்குள் எனக்கு பில் வந்திருந்தது. இரண்டு தோசை 8ரூ, சி.குழம்பு-50 ரூ என மொத்தம் 58ஐ க் காட்டியது. எனக்கு ஆப்பானாலும், ’அடேங்கப்பா’வுக்கே அவர்கள் வைத்த ஆப்பை எண்ணி மனதிற்குள் சிரித்தவாறே வெளியேறினேன்.

31 comments:

  1. ’அடேங்கப்பா’’அடேங்கப்பா’

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜீகே...

    ReplyDelete
  3. //கடலைமிட்டாய் எடுத்துட்டுப் போவேன். ஒரு மிட்டாய் சாப்பிட்டாலே, உடனடி எனர்ஜி கிடைக்கும். கூடவே கொஞ்சம் தண்ணீர் குடிச்சா, பசி போற இடம் தெரியாது//

    கண்டிப்பாக, நானும் இதை உணர்வேன்

    ReplyDelete
  4. \\வழித்துணைக்கும், வாய்த்துணைக்கும் \\
    \\ராக்கி கட்ட வரும் ஃபிகர் போல வெறுப்புடன் பார்த்தேன்.\\
    \\முதலில் புன்னகைத்த பசி இப்போது பல்லிளிக்கவே ஆரம்பித்து விட்டது\\

    அண்ணே.. அது எப்படீன்னே உங்களால மட்டும் இது முடியுது.. புல்லரிக்குது போங்க..

    நாங்க எல்லாம் பஸ்ல ஏறினா, பத்தாவது நிமிஷமே, பக்கத்துக்கு சீட்டுக்காரன சாபம் விட வப்போமுல..

    ReplyDelete
  5. வாங்க ஞான சேகரன், சரியாச் சொன்னீங்க...
    ஏன்னா, அதுல இருந்து சர்க்கரை கிடைக்கும். அதுல இருக்க மூலக்கூறுகள் உடனடியாப் பிரிஞ்சு ‘குளுக்கோஸ்’ ஐக் கொடுக்கும். அது நம்ம உடலுக்குத் தேவையான எனர்ஜி கொடுக்கும்...

    ReplyDelete
  6. //
    நாங்க எல்லாம் பஸ்ல ஏறினா, பத்தாவது நிமிஷமே, பக்கத்துக்கு சீட்டுக்காரன சாபம் விட வப்போமுல..//
    நானும் அந்த கேஸ்தான் ஆனா... அதுக்கு பசி இருக்கக் கூடாது எனக்கு...
    வேற எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது.. எல்லாமே ஓ.கே கண்டிஷன்ல தான் இருக்கணும்...

    ReplyDelete
  7. வருகைக்கும், நீண்ட கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி வசந்த்...
    தங்கள் பின்னூட்டம் இன்னும் பலரைச் சென்றடையும் என்ற நோக்கில் பிரசுரித்து விட்டேன். அனுமதி தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை,

    அட்டகாசம்.நல்லா சுவராஸ்யமா எழுதியிருக்கீங்க.வார்த்தை
    பிரயோகங்கள் அமர்க்களம்.

    செயற்கைததனம் இல்லாத நகைசுவை.யதார்த்தம்.

    பொறாமையாக இருக்கிறது.பல மாதங்கள் கழித்து படித்த நல்ல ஹியுமர் பதிவு.

    சில மட்டமான பதிவுகள் காமெடி என்ற பெயரில் ரசிக்கப்பட்டு பின்னூட்டம் கொட்டப்படும்.

    லேட்டா வந்தாலும் full formல் பதிவு
    எழுதியிருக்கிறிர்கள்.

    ReplyDelete
  9. நல்ல நடையில் அருமையா வந்துருக்கு இந்தப் பதிவு.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  10. வாங்க ரவி சார்...உங்களோட பின்னூட்டம் பார்த்துட்டு , அதுக்கு நான் தகுதியான்னு யோசிச்சிட்டிருக்கேன்.
    நான் மிக மதிக்கும் பதிவர்களுள் ஒருவரான உங்களின் வாழ்த்தினை நான் எனக்கான ஊக்கமாக எடுத்துக்கொள்கிறேன் சார்...

    ReplyDelete
  11. வாங்க துளசி டீச்சர்... ரொம்ப நாள் கழிச்சு வந்து வாழ்த்தி இருக்கீங்க... மிக்க நன்றி டீச்சர்...

    ReplyDelete
  12. //எப்பவும் விலைப் பட்டியல் இருக்கிற இடத்துக்கு எதிர்ல இருக்க மாதிரியான டேபிள்தான் என்னோட சாய்ஸ்//

    ஸேம் ஃபீலிங்க் :))))

    //ராக்கிகட்ட வரும் ஃபிகர் போல //

    நல்லாத்தான் ஃபீல் பண்ணியிருக்கீங்க செமையா இருக்கு :))))))


    அட எங்க ஊர்லயும் இதே டைட்டில ஒரு ஹோட்டல் இருக்கே நண்பர்களை விட்டு டெஸ்ட் பண்ண சொல்லணும் ! -

    ReplyDelete
  13. அட்டகாசம்..... ரொம்ப ரசனையா இந்த பதிவை எழுதியிருக்கீங்க. படிக்கும் பொழுதும் இதே உணர்வுதான் எனக்குள்ளும்!!!

    இந்த மாதிரி பஸ், ரயில் அனுபவங்கள் நிறைய உண்டு... அதிலும் குறிப்பா, கிளுகிளு மேட்டர் நிறையவே உண்டு!!

    அந்த சேச்சியை கொஞ்சம் பின் தொடர்ந்திருக்கலாமே!!!!

    ReplyDelete
  14. நல்ல நடை.. தொடர்ந்து எழுதலாமே நீங்கள்..

    (ரா. வசந்தகுமாரின் கருத்துகள் ஏற்புடையவை.)

    ReplyDelete
  15. வாங்க ஆயில்யன் சார்....
    முதல் வருகைக்கும், சேம் ஃபீலிங்குக்கும் நன்றி...
    //அட எங்க ஊர்லயும் இதே டைட்டில ஒரு ஹோட்டல் இருக்கே நண்பர்களை விட்டு டெஸ்ட் பண்ண சொல்லணும் ! -//
    எப்படி அந்த ரெண்டு பேரு சிக்கன் சாப்பிட்ட மாதிரியா...?! :-)

    ReplyDelete
  16. //
    இந்த மாதிரி பஸ், ரயில் அனுபவங்கள் நிறைய உண்டு... அதிலும் குறிப்பா, கிளுகிளு மேட்டர் நிறையவே உண்டு!!
    //
    கவிஞரே... தாராளமா எழுதுங்க...(வயது வந்தோருக்கான டிஸ்கியோடதானே..)
    //
    அந்த சேச்சியை கொஞ்சம் பின் தொடர்ந்திருக்கலாமே!!!!//
    இப்போ ஃபீல் பண்றேன்... :-(

    ReplyDelete
  17. வாங்க ஆதி நன்றி...
    //தொடர்ந்து எழுதலாமே நீங்கள்..//
    அதற்கான முயற்சிகளில்தான் இருக்கிறேன்...
    வசந்த் சொன்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்...

    ReplyDelete
  18. வழக்கமா போற கடைதான்
    எப்பவும் நல்லது.

    ReplyDelete
  19. பதிவுல மெருகு கூடியிருக்கு...

    ReplyDelete
  20. தமிழன் -கறுப்பிக்கு நன்றி...
    //வழக்கமா போற கடைதான்
    எப்பவும் நல்லது.//
    அண்ணே ஒரு அவசரத்துக்கு....
    //பதிவுல மெருகு கூடியிருக்கு...//
    சிறப்பு நன்றிகள்..
    இன்னும் நீங்க என்னோட போன பதிவுல பின்னுட்டத்துல போட்ட கேள்விக்குறிக்கு அர்த்தம் விளங்கலை...

    ReplyDelete
  21. அருமையான வார்த்தைப் பிரயோகங்கள் அண்ணே!
    எளிமையான நடை!

    ReplyDelete
  22. சிக்கனா?!
    மாறி வந்துட்டேன் போல எஸ்கேப்...

    (உங்கள் அனுபவம் குறித்த எழுத்து நடை மிகவும் அருமையாக இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.)

    ReplyDelete
  23. வாங்க தர்ஷினி வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..
    //சிக்கனா?!
    மாறி வந்துட்டேன் போல எஸ்கேப்...//
    அசைவ உணவக போர்டைப் பார்த்தும், உள்ள வந்துட்டு அப்புறம் எஸ்கேப்பா...?!

    ReplyDelete
  24. ’அடேங்கப்பா’’அடேங்கப்பா’

    ReplyDelete
  25. நன்றி காடுவெட்டி...

    ReplyDelete
  26. வருகைக்கும், புன்னகைக்கும் நன்றி கயல்விழி நடனம்.

    ReplyDelete
  27. முதல் வருகைக்கு நன்றி அரவிந்தன்...

    ReplyDelete