‘மாயக்கண்ணாடி’யில் முகம் தொலைத்த சேரனின் அடுத்த படம் ‘பொக்கிஷம்’. படத்தின் கதையைப் பற்றிக் கேள்விப்பட்ட வகையில் இது இன்னொரு ‘ஞாபகக் கையெழுத்து’ போல் தோன்றுகிறது.(ஆட்டோகிராஃப்). 70-80 காலகட்டங்களில் இருந்த காதலையும், கடிதத்தூதையும் சொல்ல வருகிறார்.
இசையமைத்திருப்பவர்கள் சபேஷ்-முரளி. இவர்கள் ஏற்கனவே சேரனுடன் இணைந்து கொடுத்த படம் ‘தவமாய்த் தவமிருந்து’.
சேரனுக்கு இயக்குனர் என்ற முறையில் இசையமைப்பாளரின் வண்ணத்தை, அவர் விருப்பத்திற்கேற்றார்போல மாற்றிக்கொள்ளும் திறம் உண்டு என்பதை தனது முந்தைய படங்களில் நிரூபித்திருக்கிறார்(இளையராஜாவைத் தவிர).எந்த இசையமைப்பாளரையும் அவர்களின் இயல்பு மறக்க வைத்து, கதைக்கேற்றார்போல பாடல்கள் வாங்கிவிடுவார்.(தேவா,பரத்வாஜ்,சபேஷ்-முரளி)
அந்த வகையில் ‘பொக்கிஷம்’ பாடல்கள் ஒரு இசைப் பொக்கிஷமே. இது வரை வந்த சேரன் படத்துப் பாடல்களில் ‘பொக்கிஷம்’ உச்சமெனலாம். வழக்கம்போல் ஒரு நாயக அறிமுகப் பாடல்,ஒரு டூயட், ஒரு குத்துப்பாடல் என்ற பழைய பல்லவியைப் பாடாமல், கதையின் போக்கில் உரசிச் செல்லும் அல்லது கதையை நகர்த்திச் செல்லும் விதமாக பாடல்களை உபயோகிக்க எண்ணி உருவாக்கியிருக்கிறார் எனலாம்.
மொத்தம் பதினோரு பாடல்கள். இரண்டு பாடல்கள் மட்டும்தான் தமிழ்த் திரைஇசை இலக்கணப்படி நான்கு (அ) ஐந்து நிமிடங்களைக் கடக்கும் முழுப்பாடல்களெனலாம். அவையுங்கூட வழக்கமான ஒரு பல்லவி, இரு சரணம் என அமையாது, கவிதைக்கு இசை அமைத்ததுபோல் தெரிகிறது.
எல்லாப் பாடல்களுமே யுகபாரதியின் பேனா பிரசவித்தவைதான்.
’hi da' 'hi di','pujju' போன்ற SMS வார்த்தைகள் இல்லாத நாளில் காதலர்கள் எப்படி மடலை ஆரம்பித்திருப்பார்கள் என நடத்தப் பட்ட சிறு கவிதைப் பட்டிமன்றம்தான் ‘நிலா நீ வானம் காற்று’எனத் தொடங்கும் இப்பாடல். -சின்மயி,விஜய் ஏசுதாஸின் குரலில் மனதை வலம் வருகிறது.பாடலில் ‘அன்புள்ள படவா’வில் சின்மயியின் சிணுங்கல் ‘சிலீர்’.இப்பாடலுக்கான பின்னிசை இதமான தென்றல்.
’அழகு முகம்’,’கனவு சிலசமயம்’,’சிறு புன்னகை’,’உலகம் நினைவிலில்லை’. இப்பாடல்கள் அனைத்தும் ஒரே மெட்டிலமைந்த குறும்பாக்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழலுக்கேற்ப இருக்கிறது.முதல் மூன்று பாடல்களைத் தனியாகவும்,இறுதிப்பாடலை மஹதி(அழகுக்கிளி..:-p)யுடனும் பாடியிருப்பவர் பிரசன்னா(’அதிரடி சிங்கர்’ முசுடு நடுவர்). பயணம், சோகம், முதல் காதல் பார்வை,காதல் என ஒவ்வொரு உணர்வுக்கேற்ப இசையும், வரிகளும், பிரசன்னாவின் குரல் பங்களிப்புமென நான்குமே நல்லிசைப் பாடல்கள்.
கார்த்திக்கின் குரலில் ‘அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே’ உற்சாக ஊற்று.ரஞ்சனியின் ‘வரும் வழியெங்கும்’, மதுபாலகிருஷ்ணனின் ‘மொழி இல்லாமலே’ இரண்டும் சோ(சு)க கானங்கள்.(பின்ன எப்படிங்க சேரன் முதுகு காட்டி அழமுடியும்...?!)
மெல்லிய சாக்ஸஃபோன் கசியலில் ஆரம்பிக்கும் ‘மூன்று நாள் ஆகுமே’ கார்த்திக்கின் குரலில் காத்திருப்பையும், காதலையும் (இரண்டும் ஒன்றுதானே..?!) கனிந்து சொல்கிறது.
‘ஓஹ்..ஓஹ்..’ விஜய்யேசுதாஸ் பாடியது.
‘ஆஜ்மொனே போலேச்சே’ என வேற்று மொழியில் ஆரம்பிக்கும் பாடல்(உஜ்ஜயினி, விஜய் ஏசுதாஸ்) போகப்போக மெலடியில் கரைந்து பின் மீண்டும் ஆரவாரத்தோடு நிறைவுறுகிறது.
பலம்: ஒரு பாடல் தவிர மற்றெல்லாப் பாடல்களிலும் தமிழும், காது கிழிக்காத இசையும் மட்டுமே உள்ளது.(இதையே ஒரு தமிழ்த் திரைப்பட ஆல்பத்தின் பலவீனமாகக் கருதுவோரும் உண்டு)
சமீபத்திய ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களுமே ரசிக்க வைத்தது ‘பொக்கிஷம்’ மட்டுமே.
’சேரன் - சபேஷ்-முரளி - யுகபாரதி’- நிச்சய வெற்றிக் கூட்டணி.
‘பொக்கிஷம்’- (இசைக்)காதலர்களைக் கொள்ளையடிக்கும்.
நன்றி: புகைப்பட உதவி india glitz மற்றும் இதர தளங்கள்