Monday, July 26, 2010

பெங்களூர் வாசம்...


   மே மாத இறுதி வாரத்தின், ஒரு ஞாயிறு காலையில் லால்பாக் கார்டனுக்கு முன் இறக்கிவிடப் பட்டிருந்தேன்.ஒன்றும் புரியாமல் விழித்த நிலையிலிருந்து இப்போது ‘ஒயிட் ஃபீல்டில்’ வீடெடுத்து, ‘சல்ப்ப’ சல்ப்ப ஓரிரண்டு இடங்களுக்குச் சென்று வந்ததில் பழகிவிட்டது பெங்களூர். இன்னும் இனிப்புச் சாம்பார் இட்லிதான் ஒத்துக் கொள்ளவில்லை.



        பெங்களூரின் க்ளைமேட் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான்கு மணி வாக்கில் மழை ஆரம்பித்து விடுகிறது. திடுமென நின்றும் போய்விடுகிறது. நீர் வண்ண ஓவியம் ரசிப்பது போன்ற ஒருவிதக் கிறக்க நிலையை ஏற்படுத்திவிடுகிறது.பேருந்துகளின் கன்னடப் பெயர்ப்பலகைகள்தான் பயமுறுத்துகின்றன.எனினும் கொஞ்சும் தமிழ்,கொஞ்சும் ஹிந்தி என காக்டெயிலாக விசாரித்தால் பதில் கிடைத்து விடுகிறது.



    ’கார்டன் சிட்டி’ என்பதால் சாலையோர மரங்களும், அதன் நிழலில் கையேந்தி பவன்களும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கின்றன. கண்ணாடி போர்த்திய கட்டடங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது.முதல்வர் எடியூரப்பாவின் சாதனைப் பதாகைகளைப் பார்க்கையில் திராவிடக் கலாச்சாரத்துக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதும் புரிகிறது. விஷ்ணு வர்தனின் ‘ஆப்த ரக்‌ஷா’ இன்னும் ஓடிக் கொண்டிருப்பது போஸ்டர்களில் தெரிகிறது.



    பெங்களூரில் எனக்குத் தெரிந்த ப்ளாக்கர் என்ற அளவில் ‘காலடி’ ஜெகன்  இருக்கிறார். அவருக்கு ஒரு காலடித்துப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம், நான் வேலை பார்க்கும் பில்டிங்கில்தான் அவரும் இருக்கிறார். ஒருநாள்  மதிய உணவு இடைவேளையில்தான் அவரைச் சந்தித்தேன். மனிதர் ப்ரொஃபைல் ஃபோட்டோவில் இருப்பதை விட இன்னும் இளமையாக இருக்கிறார்.அதிராமல், ஆனால் அசராமல் பேசுகிறார். சுய விவரத்தில் ஆரம்பித்து சாரு புராணம் வரை பேசி அப்போதைக்கு முடித்தோம்.இன்னொரு விரிவான சந்திப்புக்கு வாக்கு அச்சாரம் போட்டு வைத்தேன். அவ்வப்போது ஹைக்கூ சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

         தேவதைகளின் தேசத்திலிருந்து , காலப்பயணியும் (இரா.வசந்தகுமார்) இங்கு வந்து சேர்ந்துவிட்டார் என்பது உபதகவல். இரு வாரங்களுக்கு முன்பொரு சனிக்கிழமை சந்திக்கலாமென்றார். லீலா பேலஸ்(’சிவாஜி’ படத்துல வர்ற ஹோட்டல்ன்னு கேள்விப் பட்டிருக்கேன்) சென்று அங்கிருந்து திப்பசந்திரா செல்லலாமென எண்ணியிருந்தேன். வால்வோவில் ஏறி ஒயிட் ஃபீல்டிலிருந்து லீலா பேலஸ் செல்வதற்குள் இளையராஜா பனிரெண்டு சிம்பொனிகளைக் காதுகளுக்குள் நுழைத்திருந்தார்.ஒரு மந்தமான முற்பகலில் ம்ரங்களின் இடைவெளியில் ஒய்யாரமான லீலா பேலஸின் முன்பு நின்றிருந்தார் வசந்த். குசல விசாரிப்புகளை ஒரு காஃபிக் கடையில் முடித்துவிட்டு,ஹோட்டலின் உள்ளே இருந்த புக்ஸ்டாலுக்குச் சென்றோம்.எல்லாப் புத்தகத்தின் தலைப்புமே A-Z  எழுத்துக்களை  மட்டுமே வெவ்வேறு பெர்முடேஷன் காம்பினேஷன்களில் கொண்டிருந்ததால், நான் ஸ்டேஷனரி பகுதிக்குச் சென்றேன்.இடுப்பில் கட்டும் தாயத்து போன்றிருந்த ஒரு கீ செயினின் மேல் விலை ரூ.550/-only(அது ஒண்ணுதான் குறைச்சல்) ஒட்டப்பட்டிருந்தது. சரி, தர்காவில் மந்திரித்த தாயத்து போல என எண்ணிக் கொண்டு,புத்தகம் பார்க்க வந்த பூக்களை நானும், புத்தகங்களை வசந்தும் கண்களால் புரட்டிக் கொண்டிருந்தோம்.
லீலா பேலஸின் முகப்பில் வரவேற்’பூக்கள்’

       டையில் சிறிது வயிற்றுக்கு ஈந்து விட்டு, மார்க்கெட் செல்ல முடிவெடுத்தோம். அங்கு திப்பு சுல்தானின் கோட்டை ஒன்றும், அரண்மனை ஒன்றும் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.பேருந்தில் கண்டக்டரிடம்,’ மார்க்கெட் ஸ்டாப் வந்தால் சொல்லுங்க’ என்றவனை இடை மறித்து, ‘தேவையில்லை உங்களுக்கே தெரிந்து விடும்’ என்று ஒரு ஞானியைப் போல் புன்னகையுடன் கூறினார் வசந்த். ஆம். சொல்லித் தெரிவதில்லை மார்க்கெட் என்பதைப்போல மக்களும்,சத்தமும் இரண்டறக் கலந்து தெறித்துக் கொண்டிருந்தது.
    
திப்பு சுல்தான் கோட்டை

           பேருந்து ஏறுவதற்கு முன்பிருந்தே எங்களைத் தொடர்ந்து வந்த கருமேகங்கள்,மார்க்கெட்டில் இறங்கியவுடன் வேலையைக் காட்ட ஆரம்பித்தன.அச்சூழலை வீணாக்கிடாமல், ஒரு திறந்த வெளி உடுப்பி ஓட்டலில் ஸ்ட்ராங் காஃபியுடன் கொண்டாடினோம் மழையை. குழந்தை ஒழுங்கின்றி அடுக்கிவைத்த விளையாட்டுப் பொருள்களைப் போல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. கம்பித் தடுப்புகளினூடே,கடைகளின்கூரைகளையே தற்காலிகக் குடைகளாகக் கொண்டும், நனைந்து கொண்டே நகர்ந்தோம்.ஐந்து நிமிட நடையில், கொஞ்சம் உன்னிப்பாகத் தேடிப்பார்த்தால் கிடைத்து விடுகிறது திப்புவின் கோட்டை.உள்ளே பிள்ளையார் கோயில். அதைச்சுற்றிலும் சாய்வான கோட்டைச் சுவர்கள்: அதில் ஆங்காங்கு பொறிக்கப்பட்ட சில சிற்பங்கள்(திப்பு புலியுடன் மோதும் காட்சி உட்பட):சுற்றிலும் புல்வெளி எனத் தனித்து விடப்பட்டிருந்தது கோட்டை.(படங்களுக்கு இங்கு செல்க). பார்த்து முடித்தவுடன் இதிலென்ன பார்க்க வந்தோம் என்ற அசுவாரஸ்யக் கேள்வி எழாமலில்லை.       

       கோட்டையிலிருந்து இன்னுமொரு ஐந்து நிமிட தூரத்தில் விஸ்தாரமாய் வரவேற்கிறது திப்புவின் அரண்மனை. முன்புறம் சீராக வெட்டிவிடப்பட்ட புல்வெளியும், அதற்கு அலங்காரம் சூட்டியது போல் வண்ண மலர்களும் வளர்ந்திருந்தன. திருமலை நாயக்கர் அரண்மனையைப் போல் பிரம்மாணடம் எதிர்பார்த்த எனக்கு இங்கும் சற்று ஏமாற்றமே. ரிசசன்(Recession) டைமில் கட்டியிருப்பார்கள் போலும், ரொம்பச் சிக்கனமாகவே இருந்தது அரண்மனை. நுழைவிலேயே வரவேற்கிறது சுல்தானின் தர்பார்.மரத்தாலான தூண்கள் ,உச்சியில் பல வளைவுகளுடன் முடிகின்றன. இதுபோலப் பல அடுக்குகளால் நிறைந்திருக்கின்றது தர்பார் அறை. முன்புறம் போலவே ,பின்புறமும் இதையொத்த அமைப்பு இருக்கிறது. தற்போதைய சட்டசபையின் கீழவை, மேலவை போன்று செயல்பட்டதா எனத் தெரியவில்லை.

திப்பு சுல்தான் அரண்மனை தர்பார்
            திப்பு சுல்தான் அமரும் இடம் நடுநாயகமாக இருக்கிறது.நானும் அங்கு நின்று ஒரு ராஜ பார்வை பார்த்துக் கொண்டேன். அதன் இருபுறமும் ஓரங்களில், மாடிக்குச்செல்லும் படிக்கட்டுகள் அடைத்தே இருக்கின்றன.ராஜ ரகசியம் போலும்.இயல்பான வண்ணம் மாறிவிடாதபடி இருக்க கண்ணாடிச் சட்டங்களில் ஓவியங்கள் சிறையிருக்கின்றன.அதற்கு முன்பே நம்மக்கள் அங்கு,தங்கள் தெய்வீகக் காதலை ,இதயத்தில் அம்புவிட்டுக் கல்வெட்டியிருக்கிறார்கள்.

   கீழே வந்தால் அருங்காட்சியகம் இருக்கிறது. திப்புவின் வாழ்க்கை வரலாறு, முக்கிய நிகழ்வுகள், அவரின் செல்ல புலிப்பொம்மை(புலிப்பொறி எனலாம்.அதன் காலடியில் ஒரு வெள்ளைவீரன் சிக்கிக்கொண்டிருப்பான்.பொழுதுபோகாத போது அதனை இயக்கி, உறுமலோடு கேட்டுக் கொண்டிருப்பாராம் திப்பு சுல்தான்),அவரின் ஆட்சிப்பகுதிகள்,எழுச்சி,வீழ்ச்சி அனைத்தும் பதிவுகளாக இருக்கிறது. அவர் தயாரித்த ஏவுகணையொன்றும் அறையின் நடுவே கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. நைஸாகச் சிரிக்கும் பாதுகாவலரிடம் பத்து ரூபாய் கொடுத்துப் படமெடுப்பது உங்கள் திறமை.







        




          

25 comments:

  1. இவ்ளோ சொல்லிட்டு முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லவே இல்ல... :P

    ReplyDelete
  2. மிக நல்ல பகிர்வு. திப்புசுல்தான் கோட்டை பற்றிய தகவல்கள் எனக்குப் புதியவை.

    பெங்களூரின் கிளைமேட் பற்றி வர்ணித்து பொறாமையை ஏற்படுத்திவிட்டீர்கள். கோட்டையின் புகைப்படங்கள் மட்டும்தானா? பதிவர்கள் இணைந்து படம் எடுத்துக்கொள்ளவில்லையா?

    //சுய விவரத்தில் ஆரம்பித்து சாரு புராணம் வரை பேசி//

    இரண்டு பதிவர்கள் சந்தித்துக்கொண்டால் அவர்களது உரையாடலில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இந்த மனிதர் இருக்கிறாரே ஏன்?

    ReplyDelete
  3. ஸப்பா. தமிழ்ப்பறவையும் வசந்தகுமாரையும் யாருயா பெண்களூர்க்கு விட்டது? இலக்கிய வாசனையோடு பெண்களூர் புராணமா எழுதி மெட்ராஸ்காரனை கடுப்பேத்துறாங்க. :)) (ஹிஹி சும்மா.)

    நல்ல பதிவு. :)

    ReplyDelete
  4. ஓ..நீங்களுமா? ரைட்டு சகா

    ஹைக்கூ சந்திப்புகள்” சூப்பர்..

    //கொஞ்சும் தமிழ்,கொஞ்சும் ஹிந்தி/

    இதில் கொஞ்சும் தமிழ் என்றும், கொஞ்சம் ஹிந்தி என்றும் போட்டிருந்தால் எப்படியிருக்கும்? :))

    “காலடி ஜெகனுக்கு காலடி” என்று மனசு சொல்லியிருக்கு.. ரைட்டு

    ReplyDelete
  5. கார்த்திக்,

    எப்போ மெட்ராஸ்காரனா மாறின?

    ReplyDelete
  6. கார்க்கி சார், ஒரு பேச்சுக்கு சொல்லிட்டேன். கோயம்புத்தூர்காரனுக்கு பெங்களூர் பத்தி ஏன் கடுப்பு வரப்போறது? :))

    ReplyDelete
  7. மிக நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு. ரசித்தேன்.சக பிளாக்கரை
    ஆர்வத்துடன் சென்று பார்த்து நட்பு பாராட்டுவது பாராட்டுக்கூறியது.

    ReplyDelete
  9. ம்ம்ம்..புது இடம் ,புது சிநேகம்,புது...புதுசா எல்லாம் கிடைக்கட்டும்.சந்தோஷமாயிருக்கீங்க.அதுவே போதும்.

    சாப்பிட ஹோட்டலுக்குப் போறப்போ 2-3 பச்சை மிளகாய் கையோட எடுத்திட்டு போங்கண்ணா.
    கடிச்சுக்கிட்டே சாப்பிட்டீங்கனா இனிக்காது இட்லி !

    ReplyDelete
  10. வழக்கம் போல சுத்த ஆரம்பிச்சிவிட்டாய் மாப்பி...கூடவே பதிவர்களுடன்...சூப்பரு ;))

    \\இளையராஜா பனிரெண்டு சிம்பொனிகளைக் காதுகளுக்குள் நுழைத்திருந்தார்\\

    லிஸ்டு வரணும்...இல்லன்னா என்ன ஆகுமுன்னு எனக்கே தெரியாது ;))

    ReplyDelete
  11. @கயல்விழி நடனம்,
    வாம்மா மின்னல்...முக்கியமான விஷய்த்துக்கு தனி போஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு..வருகைக்கு, நினைவூட்டலுக்கும் நன்றி...


    @செ.சரவணக்குமார்...
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சரவணக்குமார்..முதலில் கோட்டையைப் பாருங்கள். வருங்காலங்களில் ராஜாவின்(பரணி)படத்தைப் பார்க்கலாம்.
    //இரண்டு பதிவர்கள் சந்தித்துக்கொண்டால் அவர்களது உரையாடலில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இந்த மனிதர் இருக்கிறாரே ஏன்?//
    அம்புட்டுக் கோமாளித்தனம் பண்றார்...இவர் சினிமாவுக்கு நடிக்க வந்துடுவாருன்னு வடிவேலு பயப்படுறாராம்...

    ReplyDelete
  12. @கார்த்திக்...
    வாங்க கார்த்திக்... நன்றி.நீங்க கோயமுத்தூர்க்காரர்தான் ஒத்துக்கிறேன்.மூக்கை மூடிக்கிட்டே போஸ்ட்டைப் படிங்க.. எந்த வாசனையும் வராது.

    @கார்க்கி...
    நன்றி சகா...
    அது ‘கொஞ்சும் ஹிந்தி’தான் . நான் ஹிந்தி பேசுற ஸ்டைலப் பார்த்து என் தோழிகள் அப்படித்தான் சொல்றாங்க... :-)

    ReplyDelete
  13. @சே.குமார்...
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே....

    @கே.ரவிஷங்கர்...
    கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்...

    ReplyDelete
  14. @ஹேமா...
    வாங்க ஹேமா...இனிப்புச் சாம்பாரை வெல்லக் கொடுத்த ஆலோசனைக்கும் நன்றி...

    @கோபிநாத்...
    வாங்க மாப்பி...இந்த வயசுல சுத்தாம எப்ப சுத்தப் போறோம் ஊரை...
    //லிஸ்டு வரணும்...இல்லன்னா என்ன ஆகுமுன்னு எனக்கே தெரியாது ;))//
    உங்களுக்குத் தெரியாத லிஸ்ட்டா நான் கொடுக்கப் போறேன் நண்பரே...விரல்வழிக் கசியும் துளிகளாக விரைவில் பதிவேறலாம்...

    ReplyDelete
  15. ஒரு வழியா போஸ்ட் பண்ணிட்டீங்களா?


    நல்லாயிருக்கு

    ReplyDelete
  16. // நானும் அங்கு நின்று ஒரு ராஜ பார்வை பார்த்துக் கொண்டேன். //

    ஏன் ஒழுங்காவே பார்க்கலாமே?

    ReplyDelete
  17. நேரம் கிடைக்கும் போது bangalore palace,iskcon சென்று வாருங்கள்.பதிவெழுத நிறையா மெட்டர் சிக்கும்.///இனிப்பு சாம்பார்///
    ஆமா சாமி அந்த கொடுமைய தான் முனு வருசமா அனுபவிக்கிறேன்

    ReplyDelete
  18. பெங்களூர் வாசம் அருமை. நீங்கள் சொன்னவற்றில் சில சம்பவங்களை நானும் கடந்திருக்கிறேன்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  19. @தமிழ்ப்பறவை

    //மூக்கை மூடிக்கிட்டே போஸ்ட்டைப் படிங்க.. எந்த வாசனையும் வராது.

    நன்றிங்க. இனி அப்படியே செய்யுறேன்.

    ReplyDelete
  20. இன்னும் கொஞ்சம் சுவாரசியப் படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  21. @மகேஷ்...
    நன்றி தம்பி..இப்பவாவது போஸ்ட் பண்ணினேனேன்னு சந்தோஷப் படு...

    எம்.விஷ்ணுப்ரகாஷ்...
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே... இஸ்கான் டெம்பிள் ஆர்வமில்லை.. பெங்களூர் பேலஸ் விசாரித்து செல்லப் பார்க்கிறேன்..

    ReplyDelete
  22. @கார்த்திக்...
    ச்சும்மா ட்டமாசூக்குக்ச் சொன்னேன்..சீரியஸா எடுத்துக்காதீங்க..

    @ஆதிமூலகிருஷ்ணன்,,
    விமர்சனத்திற்கு நன்றி ஆதி.. அடுத்த பதிவில் முயற்சிக்கிறேன்...நன்றி...

    ReplyDelete
  23. @ஸ்ரீ...

    நண்பரே..முதல் வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி...

    ReplyDelete
  24. /*எம்.விஷ்ணுப்ரகாஷ்...
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே... இஸ்கான் டெம்பிள் ஆர்வமில்லை..
    */

    ஹா...ஹா...ஹா.... இஸ்கான் டெம்பிள் போய்ட்டு வாந்தாச்சுல்ல... இக்கடச் சூடு :: My Name ISKCON.

    ReplyDelete
  25. இந்தியா நம்மளுக்கு உங்கு வர கடவுச்சீட்டு தரத் தேவையில்லை. ஏனென்றால் உங்கு வந்து நாம் பார்க்க விரும்புவதைத் தானே நீங்களே காட்டுறிங்கள்... அருமை சகோதரா..

    ReplyDelete